Tuesday, April 04, 2006

நபி(ஸல்) அவர்களை கனவில் காண முடியுமா?

"ஒரு மூமின் வெள்ளிக்கிழமை இரவு இரண்டு ரக்அத் தொழுது அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் குல்ஹுவல்லாஹு... சூராவை 25 தடவை ஓதிவிட்டு, பின்பு ஸலாம் கொடுத்து விட்டு 'ஸல்லல்லாஹு அலா முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி' என்று ஆயிரம் தடவை கூறினால் அன்றைய இரவில் கனவில் என்னை நிச்சயமாக காண்பான். மறுவாரம் வெள்ளி வரும் முன் கனவில் என்னைக் காண்பான். என்னை ஒரு வாரம் பார்த்துவிட்டால் அல்லாஹ் அவனது குற்றங்களை மன்னிக்கிறான்."

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் ஒரு செய்தியை இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் தனது 'அல்மவ்ளூஆத்' எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
இதன் அறிவிப்பாளர் வரிசையில் யாரென்றே அறியப்படாதவர்கள் அறிமுகமற்ற பலர் இடம் பெறுவதிலிருந்தே இது பலவீனமான செய்தி தான் என்பது புலனாகும்.

நபி(ஸல்) அவர்களை கனவில் நாம் காண முடியுமா? காண முடியும் என்பதற்கு சிலர் கீழ்க்கண்ட ஹதீஸ்களை ஆதாரமாக வைக்கின்றனர்.

"யார் என்னை கனவில் காண்கிறாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.

யார் என்னைக் காண்கிறானோ அவன் உண்மையையே கண்டான் என்று நபி(ஸல்) கூறியதாக அபூகதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அஹ்மத்.

இந்த ஹதீஸ்கள் மேலெழுந்த வாயாகப் பார்க்கும் போது நபி(ஸல்) அவர்களை கனவில் காண முடியும் என்று தெரிந்தாலும், உண்மையில் நபி(ஸல்) அவர்களை கனவில் காண வேண்டுமானால் அவர்கள் உயிருடன் இருக்கும் போது கனவில் காண்பவர் நபி(ஸல்) அவர்களைத் தான் கண்டு கொண்டார் என்றும் அல்லது இதுவரை நேரில் காணாதவர், கனவின் மூலம் கண்டால் இனி நேரிலும் காண்பார் என்றும் தான் முடிவுக்கு வரவேண்டும். "இந்த முடிவு தான் மேற்கொள்ள வேண்டும்" என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

'யார் என்னை கனவில் காண்கிறாரோ அவர் (நேரிலும்) விழிப்பிலும் என்னைக் காண்பார். ஏனென்றால் ஷைத்தான் என் வடிவத்தில் வரமாட்டான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.

கனவில் கண்டால் நேரிலும் காண்பார் என்றால், நேரில் காண்பது அவர்கள் உயிருடன் உள்ள காலத்திலேயே பொருந்தும். தெளிவான ஆதாரப்பூர்வமான ஹதீஸ் மூலம் அவர்கள் உயிருடன் வசிக்காத காலத்தில் உள்ள நம்மைப் போன்றவர்களால் நபி(ஸல்) அவர்களைக் காண முடியாது என்பது தெளிவாகிறது.

நன்றி: ஏ1ரியலிசம்.காம்

0 comments: