Saturday, August 09, 2008

போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல்! - 3

இங்கு பாகம் 1 மற்றும் பாகம் 2

போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல்! - 3
உண்மை இதழில் வெளியான செய்திக்கு பதிலடி!!


பாகம் 3


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மிஹ்ராஜ் எனும் விண்வெளிப் பயணம் குறித்து தேவையில்லாமல் விமர்சித்து திராவிட கழகத்தின் உண்மை ஏடு முஸ்லிம்களை வம்புக்கிழுத்தது.

எதற்கெடுத்தாலும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்க இயலுமா என்று கேட்டு தங்களை மேதாவிகள்போல் காட்டிக் கொள்ளும் போலி பகுத்தறிவுவாதிகளின் மடமைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட அவர்களே நமக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்து விட்டார்கள்.

எனவே மிஹ்ராஜ் பற்றி விளக்குவதற்கு முன்னால் பகுத்தறிவின் ஒட்டு மொத்த குத்தகைதாரர்களின் மடமைகளையும் மூடநம்பிக்கைகளையும் அம்பலப்படுத்தி வருகிறோம்.

நாம் எழுப்பும் கேள்விகள் குறித்து பகிரங்க விவாதத்திற்கு தயாரா என்று வீரமணி வகையறாக்களைக் கேட்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக மேலும் சில கேள்விகளை முன் வைக்கிறோம்.


பெரியாருக்குச் சிலை

ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னால் மரணித்து விட்டார். அவர் அடக்கம் செய்யப்பட்டு மண்ணோடு மண்ணாகி விட்டார் என்பது வரலாற்று உண்மை. அறிவியல்பூர்வமாக நிரூபிக்க அறைகூவல் விட்டால் அதை நிரூபிக்க முடியும்.

ஆனால் பகுத்தறிவின் மொத்த குத்தகைதாரர்கள் பெரியாருக்கு நாடெங்கும் சிலைகளை நிறுவியுள்ளனர். இரும்பு, செம்பு, பாறை போன்றவற்றை பெரியாரைப்போல் செதுக்கி வைத்துள்ளனர். அந்தச் சிலைகளின் பீடத்தில் பெரியார் என்று எழுதியும் வைத்துள்ளனர்.

எதற்கெடுத்தாலும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பிவரும் பகுத்தறிவு கொழுந்துகளிடம் இதை அறிவியல்பூர்வமாக நிரூபிக்குமாறு அறைகூவல் விடுக்கிறோம்.

பெரியாரின் வெண்கலச் சிலையையும், பெரியார் எதிர்த்த இந்துக் கடவுள்களின் வெண்கலச் சிலையையும் உலகில் உள்ள எந்தச் சோதனைக் கூடத்திலாவது சோதித்துப் பார்த்து இது பெரியார் வெண்கலம், இது சாமி சிலையின் வெண்கலம் என்று வீரமணி வகையறாக்கள் நிரூபித்துக் காட்டுவார்களா?

பெரியாரின் கற்சிலையையும், அதே கல்லால் ஆன அம்மிக் குழவியையும் அறிவியல்பூர்வமாக சோதித்தால் இரண்டும் ஒன்று என்ற முடிவுதான் கிடைக்கும்.

இது பெரியார் எனக் கூறுவதற்கு எந்த அறிவியல் நிரூபணமும் இல்லை என்று தெரிந்து கொண்டே பெரியார் சிலை நிறுவு வது எந்த வகையான பகுத்தறிவு?

பொது இடங்களில் இத்தகைய சிலைகளை நிறுவுவதால் மக்களுக்கு இடையூறு தவிர எந்தப் பயனும் இல்லை என் பதையும், பொருள் விரயம் என்பதையும் அறியாத இவர்கள் எப்படி தம்மை பகுத்தறிவுவாதிகள் எனக் கூறிக்கொள்கிறார்கள்?


சிலைக்கு மாலை அணிவித்தல்


சிலை வடிப்பது எந்த அளவுக்கு மடமையோ அது போன்ற - அதையும் மிஞ்சுகின்ற மடமைதான் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது.

பெரியாரின் பெயரால் மூடத்தனமாக நிறுவப்பட்ட ஒரு சிலைக்கு இவர்கள் மாலை அணிவிக்கிறார்களே இந்த மாலை அணிவிப்பதை அந்தச் சிலை உணருமா? அல்லது அந்தச் சிலையின் மூலம் யாரை நினைக்கிறார்களோ அந்தப் பெரியார்தான் இதை உணருவாரா?

இதில் அடங்கியுள்ள அறிவியல் தத்துவம் என்ன இதில் உள்ள பகுத்தறிவு என்ன என்பதை பகிரங்க மேடையில் பட்டியல் போட்டு எமது கேள்விகளை எதிர் கொள்ள போலி பகுத்தறிவுவாதிகள் தயாரா?

இதுபோன்ற சிலைகளை வடித்துக் கொண்டு, இந்து மத பக்தர்கள் பூவையும், தேங்காயையும், சூடத்தையும் காட்டுவது மட்டும் மூடநம்பிக்கை என்றால் பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது மட்டும் பகுத்தறிவா?

குறிப்பிட்ட சிலைக்குள் அவர்கள் ஒரு வரைப் பார்ப்பதற்கும் அதுபோன்ற சிலை யில் பெரியாரைப் பார்ப்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன?

தெய்வங்களை நீங்கள் மாற்றிக் கொண்டீர்களே தவிர நம்பிக்கை ஒரே மாதிரியானதுதானே!

அவர்கள் படையல் செய்யும் பொருட்கள் வேறு! நீங்கள் படையல் செய்யும் பொருட்கள் வேறு என்ற வித்தியாசத்தைத் தவிர இரண்டு நம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம்?

கடவுள் சிலையைக் கடத்திச் சென்றால் அதிலிருந்து அந்தக் கடவுள் தன்னைத் தானே காத்துக் கொள்வாரா, பக்தர்கள் தானே காக்க வேண்டும், கடவுள் சிலை காணாமல் போய் விட்டால் அதைப் போலீஸ்தானே மீட்டுத் தரவேண்டும் என்றெல்லாம் பகுத்தறிவு வாதம் பேசினீர்களே! இதே கேள்வியை உங்களிடம் கேட்டால் அதற்கு அறிவியல்பூர்வமாக உங்களால் மறுமொழி கூற முடியுமா?

பெரியார் சிலையை யாரேனும் கடத்திச் சென்றாலும் அவரது பக்தர்கள்தானே அதைத் தடுக்க வேண்டும். பெரியாரின் சிலையே தன்னைத்தானே காத்துக் கொள்ளுமா? பெரியார் சிலை காணாமல் போனால் போலீஸ்தானே அதை மீட்க வேண்டும்?

காக்கைகள் எச்சம் போடுவதைக்கூட அந்தச் சிலையால் தடுக்க முடியாது எனும்போது அதை பெரியார் என்று உரு வகப்படுத்துவது எந்த வகையில் பகுத்தறிவு என்பதை வீரமணி வகையறாக்கள் விளக்க வேண்டும்.

இந்தக் கேள்வியை திராவிடக் கொழுந்து ஒருவரிடம் நாம் நேரில் கேட்டபோது, அவர் அளித்த பதிலைத்தான் இவர்களும் தர முடியும்.

கல்லைக் கடவுள் என்று எண்ணுவோர் அந்தக் கல்லிடம் வேண்டுதல் செய்கிறார்கள். பெரியாரின் சிலையிடம் நாங்கள் வேண்டுதல் எதுவும் செய்வதில்லையே என்பதுதான் அந்த திராவிடக் கொழுந்து அளித்த பதில். இதில் ஏதாவது பகுத்தறிவு இருக்கிறதா?

யானைக்கு சிலை வடிப்பவர்கள் அதில் யானையைக் காண்பார்கள்.
பூனைக்கு சிலை வடிப்பவர்கள் அதில் பூனையைக் காண்பார்கள்.
மனிதனின் சிலை வடிப்பவர்கள் அதில் மனிதனைக் காண்பார்கள்.
கடவுளின் சிலை வடிப்பவர்கள் அதில் கடவுளைக் காண்பார்கள்.

எல்லாமே இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்வதன் வெளிப்பாடுதான். இந்த அடிப்படையை விளங்காமல் நாங்கள் பெரியாரிடம் வேண்டுதல் செய்தோமா என்று கேட்பது என்னே மதியீனம்!

யானை சிலையைக் காண்பவன் அதற்கு மாலை அணிவிக்க மாட்டான். ஆனால் பெரியார் சிலையைக் காண்பவன் அதற்கு மாலை அணிவிக்கிறான். இதனால் பெரியார் சிலை வடிப்பவர் களைவிட யானை சிலை வடிப்பவர்கள் அறிவில் குறைந்தவர்கள் என்று நாம் வாதம் செய்தால் அதை வீரமணி வகையறாக்கள் ஒப்புக் கொள்வார்களா?


நினைவிடமும் அஞ்சலியும் !


பெரியார் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் எழுப்புவதும், அதில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதும் போலி பகுத்தறிவு வாதிகளின் வணக்க வழிபாடாக அமைந்துள்ளது.

ஒருவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் அவரது நினைவிடம் என்று முடிவு செய்வதில் உள்ள பகுத்தறிவு என்ன? எந்த இடமாக இருந்தாலும் அந்த இடத்தில் எத்தனையோ காரியங்கள் நிகழ்ந்திருக்கும். அந்த இடத்தில் நடந்த ஏராளமான காரியங்களில் இந்த மனிதர் அடக்கம் செய்யப்பட்டதும் ஒன்று.

அத்தனையையும் அலட்சியம் செய்துவிட்டு இன்னாரின் நினைவிடம் என்று அந்த இடத்தை முடிவு செய்வது எந்த வகையான பகுத்தறிவு?

அந்த மனிதர் அடக்கம் செய்யப்பட்டு ஆண்டுகள் பல கடந்துவிட்டால் அவர் மண்ணோடு மண்ணாக மக்கிப் போய் இருப்பார்.

காலாகாலத்துக்கும் அதை அவரது நினைவிடம் என்று கருதிக் கொண்டாடுவதற்கும், பகுத்தறிவுக்கும் என்ன சம்மந்தம்? அதையாவது மன்னித்து விடலாம். அந்த இடத்தில் இலட்சக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து அழகு படுத்துவதுதான் பகுத்தறிவா?

இதையும்கூட மன்னித்து விடலாம். அந்த இடத்தில் மலர் வளையத்தை வைத்து அஞ்சலி செலுத்துகிறீர்களே! நீங்கள் மலர் வளையம் வைப்பதை பெரியார் அறிவாரா? உணர்வாரா? உணர மாட்டார் என்றால் அங்கே மலர் வளையம் வைப்பதில் உள்ள அறிவியல் தத்துவம் என்ன என்பதை முஸ்லிம்களை வம்புக் கிழுக்கும் வீரமணிகள் விளக்குவார்களா? இவர்களின் பகுத்தறிவும் சுயமரியாதையும் இன்னும் அம்பலமாகும்.

இன்ஷா அல்லாஹ்...

நன்றி: உண்ர்வு இதழ்

தலைவரின் கொள்கைகளை விளங்கி நடப்பதை விட்டுவிட்டு, அவருக்கு சிலை வடித்து, மாலை மரியாதை செய்பவர்களின் பகுத்தறிவு இப்படித்தான் பல் இழிக்கும்.

Thursday, August 07, 2008

போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல்! - 2

பாகம் 1 க்கு இங்கே செல்லவும்.

போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல்!உண்மை இதழில் வெளியான செய்திக்கு பதிலடி!!

பாகம் 2


முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கும் வகையில் திராவிடர் கழகத்தின் உண்மை எனும் ஏடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மிஹ்ராஜ் எனும் விண்வெளிப் பயணம் பற்றி கிண்டலடித்து கட்டுரை எழுதியதையும், 'உண்மை' ஏட்டின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு முன்னால் புரிந்து கொள்ள சில விஷயங்களையும் நாம் சுட்டிக் காட்டியிருந்தோம்.


மிஹ்ராஜ் பற்றிய உண்மை ஏட்டின் விமர்சனத்துக்குள் நுழைவதற்கு முன்னால் போலி பகுத்தறிவுவாதிகளுக்குச் சொல்ல வேண்டிய சில செய்திகளையும் நாம் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.


மதவாதிகள் மூடநம்பிக்கை மிக்கவர்கள், சுயமரியாதை அற்றவர்கள் என்றெல்லாம் தொடர்ந்து விமர்சனம் செய்துவரும் போலி பகுத்தறிவுவாதிகள் முதலில் தங்களின் நடவடிக்கைகளை பகுத்தறிவுப்பூர்வமாகவும் அறிவியலுக்கு ஏற்றவாறும் அமைத்துக் கொள்ள வேண்டும்.


மதவாதிகள் தங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் அறிவியல்பூர்வமாக அமைத்துக் கொண்டதாக உரிமை கொண்டாடுவதில்லை. அவர்களிடம் சில மூடநம்பிக்கைகள் இருப்பதை மன்னித்துவிடலாம். ஆனால் பகுத்தறிவையும், சுயமரியாதையையும், ஒட்டு மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்துள்ள வீரமணி வகையறாக்களிடம் மூட நம்பிக்கை இருந்தால் அது மன்னிக்க முடியாததாகும்.


திராவிட இனம்


போலி பகுத்தறிவுவாதிகள் தம்மை திராவிடர் கழகம் என்ற பெயரில் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். மனித குலத்தை ஆண்கள், பெண்கள் என்று வகைப்படுத்துவதில் அறிவியல் பூர்வமான நிரூபணம் இருக்கிறது. மனித குலத்தை இரத்த வகைகளின் அடிப்படையில் குரூப்களாக வகைப்படுத்துவதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியும்.


மனித குலத்தை அவர்களின் நடத்தை அடிப்படையில் நல்லவன், கெட்டவன் என்று வகைப்படுத்துவது அறிவுப்பூர்வமானது என்பதை ஒப்புக் கொள்ளலாம்.
மனிதர்களை திராவிடர் எனவும், ஆரியன் எனவும் இவ்விரண்டிலும் சேராதவர்கள் எனவும் வகைப்படுத்துவதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியுமா?


ஒரு ஆரியனின் உடலையும், திராவிடனின் உடலையும், இரண்டிலும் சேராதவரின் உடலையும் அறிவியலின் அனைத்து வகையில் சோதித்துப் பார்த்தாலும் அந்த அறிவியல் காரணமாக இவர் திராவிடர், இவர் ஆரியர் என்று நிரூபித்துக் காட்ட வீரமணி வகையறாக்கள் முன் வருவார்களா?


சிந்திக்கும் திறன் குறைந்த காலத்தில் சிலர் தம்மை ஆரியர் என்று வகைப்படுத்திக் கொண்டனர். மற்றும் சிலர் தம்மை திராவிடர் என்றும் வகைப்படுத்திக் கொண்டனர். இந்த மூடத்தனத்தை சிந்திக்காமல் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது எந்தவகையான பகுத்தறிவு என்பதை போலி பகுத்தறிவுவாதிகள் பொதுமேடையில் விவாதிக்கத் தயாரா?


திராவிடன் எல்லாம் நல்லவன் என்றும், ஆரியன் எல்லாம் கெட்டவன் என்றும் கூறுவதில் ஏதாவது பகுத்தறிவு இருக்கிறதா?


திராவிடனான மலையாளியும், திராவிடனான கன்னடனும், திராவிடனான தெலுங்கனும், திராவிடனான தமிழனுக்கு தண்ணீர் தர மறுக்கிறார்களே! திராவிடன் தண்ணீர் தர மறுப்பதால் நாம் அதைத் தட்டிக் கேட்கக் கூடாது என்று போலி பகுத்தறிவுவாதிகள் கூறுவார்களா?


ஆரியன் எல்லாம் கெட்டவன் என்று ஒரு பக்கம் மூட நம்பிக்கையை விதைத்துக் கொண்டு இன்னொரு பக்கம் ஆரியரான ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை பட்டம் கொடுத்தீர்களே! இந்த இரண்டில் எது பகுத்தறிவுப்பூர்வமானது? எது அறிவுப்பூர்வமானது? போலி பகுத்தறிவுவாதிகளால் விளக்க முடியுமா?


குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்ற மூடநம்பிக்கைக்கு பகுத்தறிவு சாயம் பூசும் போலி பகுத்தறிவுவாதிகளே! உங்கள் நம்பிக்கைப்படியே திராவிடக் குரங்கிலிருந்து திராவிடனும், ஆரிய குரங்கிலிருந்து ஆரியனும் தோன்றினான் என்றால் அதை நிரூபிக்க முடியுமா? டார்வின் தத்துவத்தின்படி கூட உங்களால் இதை நிரூபிக்க முடியாது.


உங்கள் பகுத்தறிவே பல்லிளிக்கும்போது மற்றவர்களிடம் பகுத்தறிவு வாதம் பேச கொஞ்சமாவது வெட் கப்பட வேண்டாமா?


ஜீனோம் இரகசியம்


மனிதனின் ஜீன்களைப் பற்றியும் இரத்த வகைகளைப் பற்றியும், உடலின் உட்கூறு பற்றியும், முழு அறிவு இல்லாத காலத்தில் டார்வின் என்பவன் வெளித் தோற்றத்தின் அடிப்படையில் ஊகமாக (அறிவியல் பூர்வமாக அல்ல) குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்று கூறினான். அவன் காலத்து அறிவு அவ்வளவுதான் என்பதால் டார்வினை மன்னித்து விடலாம்.


ஆனல் அறிவியல் பூர்வமாக இது பொய் என்று நிரூபிக்கப்பட்ட பிறகும் அதே மூட நம்பிக்கையைப் பிரச்சாரம் செய்வது எந்த வகை பகுத்தறிவு?


போலி பகுத்தறிவுவாதிகளுக்கு நாம் அறைகூவல் விடுக்கிறோம்.



குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்பதை அறிவியல் நிரூபணத்துடன் நிரூபித்துக் காட்ட நீங்கள் தயாரா?


மனிதன் எந்த இனத்திலிருந்து வந்தவனோ அந்த இனமும் மனித இனமும் உடலின் உட்கூறு விஷயத்தில் நெருக்கமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அதிலிருந்து இது வந்தது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபணமாகும்.


மனிதனின் இரத்தம், குரங்கின் இரத்தம் இரண்டையும் சோதித்துப் பார்த்து குரங்கின் இரத்தம் மனிதனின் இரத்தத்திற்கு 90 சதவீதம் நெருக்கமாக உள்ளது என்று நிரூபித்தால் இதில் ஏதோ அறிவியல் இருக்கிறது என்று முடிவு செய்ய இயலும்.


மிருகங்களின் இரத்தத்தை மனிதனுக்குச் செலுத்த ஏதாவது வழி இருக்கிறதா என்று ஆய்வு செய்தபோது குரங்கின் இரத்தம் மனித இரத்தத்துடன் எந்த வகையிலும் ஒத்துப்போகவில்லை. அடர்த்தி, வெள்ளை, சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை உள்ளிட்ட எதுவுமே மனித இரத்தத்திற்கு நெருக்கமாக இல்லை என்று கண்டறிந்து விட்டனர்.


மிருகங்களில் பன்றியின் இரத்தம் மட்டுமே மனிதனின் இரத்தத்திற்கு மிகவும் நெருக்கமாக உள்ளது என்பதுதான் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


ஓரளவாவது அறிவியல் பூர்வமாக நடக்க போலி பகுத்தறிவுவாதிகள் விரும்பினால் பன்றியிலிருந்து மனிதன் தோன்றியிருக்கலாம் என்று கூறினால் அது டார்வின் ஊகத்தை விடச் சிறந்ததாக இருக்கும்.


அதுபோல் மனிதனின் இதயம் செயல் இழந்து போவதால் பலரும் மரணிக்கிறார்கள். எனவே மிருகங்களின் இதயத்தை மனிதனுக்குப் பொருத்த முடியும் என்றால் பலரது உயிரைக் காப்பாற்றலாமே என்று விஞ்ஞானிகள் முயன்றனர்.


குரங்கின் அடுத்த மேல்நிலைதான் மனிதன் என்பது உண்மையாக இருந்தால் குரங்கின் இதயம் மனிதனின் இதயத்துக்குச் சமமானதாக அல்லது அதிக நெருக்கமானதாக இருக்க வேண்டுமல்லவா?


விஞ்ஞானிகளின் முடிவு டார்வினைப் பொய்ப்பிக்கும் வகையில்தான் அமைந்தது. இதயத்தின் அளவு, அதன் துடிப்பு, அது 'பம்ப்' பண்ணும் வேகம் உள்ளிட்ட எதிலுமே மனிதன் இதயத்துடன் குரங்கின் இதயம் கொஞ்சமும் ஒத்துப் போகவில்லை என்று கண்டறிந்தனர்.


எந்த மிருகத்தின் இதயத்தை விடவும் பன்றியின் இதயமே மனிதனின் இதயத்துக்கு நெருக்கமானது என்று கண்டறிந்து விட்டனர்.


அறிவியல் பூர்வமாக மனிதனுக்கும், குரங்குக்கும் எந்த நெருக்கமும் இல்லை என்பது இதன் மூலம் நிரூபணமான பின்பும் குரங்கின் புதல்வர்கள் இனிமேல் தம்மை பன்றியின் புதல்வர்கள் என்று அறிவிக்கத் தயாரா?


இதைவிட முக்கியமானது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஜீனோம் இரகசியம் துரையைச் சேர்ந்த பிறமலை கள்ளர் சமுதாயம் உள்ளிட்ட உலகின் பல மக்களின் ஜீன்களை சோதித்து விஞ்ஞானிகள் எடுத்த முடிவு என்ன?


மனித குலம் முழுவதும் ஒரே ஒரு ஆப்பிரிக்கத் தாயிலிருந்து தோன்றியவர்கள் என்பதுதான் அந்த முடிவு.


(இதுபோன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் போலிப் பகுத்தறிவுவாதிகளுக்கு தெரியாவிட்டால் இந்தியா டுடேயில் மிகவும் தெளிவாக, ஆதாரப்பூர்வமாக இது பற்றி சிறப்பிதழ் போட்டார்கள். அதையாவது வாசிக்கட்டும்).


மனிதர்களில் திராவிடர், ஆரியர் என்பதெல்லாம் கிடையாது. அனைவருமே ஒரே தாய், தந்தையிலிருந்து பிறந்தவர்கள் என்று இஸ்லாம் கூறுவதுபோலவே அறிவியலும் கூறுகிறது என்பதை போலிப் பகுத்தறிவுவாதிகள் கவனிக்கட்டும்.


பிறந்த நாளும், நினைவு நாளும்


போலிப் பகுத்தறிவுவாதிகள் பெரியாரின் பிறந்த நாள், இறந்த நாள் என்று குறிப்பிட்ட நாளில் கொண்டாடுகின்றனர்.


பிறந்தநாளின்போது இவர்கள் செய்யும் மூடநம்பிக்கைகளைத் தனியாகப் பார்ப்போம். பிறந்த நாள், இறந்த நாள் என்று ஆண்டுதோறும் கொண்டாடுவது எந்த வகையில் அறிவியல் பூர்வமானது என்பதை போலி பகுத்தறிவுவாதிகள் நிரூபிக்கத் தயாரா?


01.01.1900 த்தில் ஒருவர் பிறந்ததாக வைத்துக் கொள்வோம். அந்த நாள்தான் அவரது பிறந்த நாள் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. 01.01.1901, 01.01.1902 என்று அடுத்தடுத்த வருடங்களில் வரும் நாளை பிறந்த நாள் என்று கூறுவது அறிவியலுக்கு எதிரானது இல்லையா?


01.01.1900 என்பது போய்விட்டது. அறிவியல் பூர்வமாக அந்த நாள் திரும்பி வரப்போவது இல்லை. 01.01.1901 என்பது 01.01.1900த்தில் பிறந்தவரின் பிறந்த நாளாக எப்படி ஆகும்? 01.01.1901ல் பூமி ரிவர்சில் சுற்றி 01.01.1900த்தை அடைகிறதா?


பகுத்தறிவு இல்லாதவர்கள் என்று போலி பகுத்தறிவுவாதிகளால் எள்ளி நகையாடப்படுவோர் பிறந்த நாள், நினைவு நாள் என்று மூடத்தனமாக அறிவியலுக்கு எதிராக முடிவு செய்ததை கண் மூடி நம்பிக் கொண்டு இவர்களும் பின்பற்றுகின்றனர் என்பதைத் தவிர, இதில் எள்ளின் முனையளவும் அறிவியல் கிடையாது.


பூமியின் சுழற்சி, சூரியனின் ஓட்டம் மற்றும் சுழற்சியின் அடிப்படையில் 01.01.1900தான் 01.01.1901 என்று ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்ட போலி பகுத்தறிவுவாதிகள் முன் வரவேண்டும்.


மற்றவர்கள் எப்படி உணர்வுப்பூர்வமாக அந்தக் காரியத்தையும் செய்து வருகிறார்களோ அதுபோலதான் பகுத்தறிவின் மொத்த குத்தகைதாரர்களும் நடக்கின்றனர். மற்றவர்களின் நம்பிக்கைக்கு அறிவியல் விளக்கம் கேட்பதற்கு முன்னால் தங்களின் இந்த நம்பிக்கையையும் அறிவியல் ஆதாரத்துடன் வீரமணி வகையறாக்கள் நிரூபிக்க தயாரா என்பதை அறைகூவலாக முன் வைக்கிறோம்.


சந்தி சிரிக்கும் உங்கள் சுயமரியாதை யையும், போலி பகுத்தறிவையும் இன்னும் கிழித்து எறிய வேண்டியுள்ளது. அதை முடித்துவிட்டு மிஹ்ராஜ் பற்றி பதில் தருவோம். இன்ஷா அல்லாஹ்.



நன்றி: உணர்வு இதழ்


அறிவியலைக் கொண்டு அனைத்தையும் அளவிட முடியும் என்பதற்கான ஆதாரத்தை தரஇயலுமா?

போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல்! - 1

போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல்!உண்மை இதழில் வெளியான செய்திக்கு பதிலடி!!

பாகம் 1

இராமர் உண்மையிலேயே வாழ்ந்தவரா அல்லது கற்பனைப் பாத்திரமா என்ற விமர்சனம் தலை தூக்கியிருந்த சமயத்தில் அதற்கு பதில் சொல்லப்புகுந்த ராமகோ பாலன் நபிகள் நாயகம் பற்றி இப்படிக் கேள்வி கேட்க முடியுமா? என்று எதிர் விமர்சனம் செய்திருந்தார்.

அதற்கு மறுப்பு அளிக்கும் வகையில் உணர்வில் எழுதப்பட்ட கட்டுரையில் ''நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு கற்பனைப் பாத்திரமன்று. அவர் ஒரு முன் மாதிரி. அதற்கு வரலாற்று ஆதாரங்கள் உண்டு; அறிவியல் பூர்வமான நிரூபணங்களும் உண்டு. அப்படிப்பட்ட ஒருவரைக் கற்பனைக் கதாபாத்திரத்தோடு ஒப்பிடுவது மடத்தனம்'' என குறிப்பிட்டிருந்தோம். (உணர்வு 5-11-2007)

இராமர் என்பவர் வாழ்ந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் நபிகள் நாயகம் இவ்வுலகில் வாழ்ந்த உண்மையான பாத்திரம் என்பதற்கு சான்று உள்ளது என்பதுதான் இதன் சாராம்சம். உணர்வில் எழுதப்பட்டதை ஒருவர் விமர்சிப்பது என்றால், எழுதப்பட்டது குறித்துதான் விமர்சிக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கற்பனைப் பாத்திரமே என்று சான்றுகளை எடுத்துக்காட்ட வேண்டும். அல்லது நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்தார் என்பதை நிரூபிக்க இயலுமா என்று அறைகூவல் விட வேண்டும்.
ஆனால் பகுத்தறிவு என்ற போர்வையில் மூடநம்பிக்கைகளை மூட்டை மூட்டையாக முதுகில் சுமந்துள்ள திராவிடக் கழகத்தின் மாதமிருமுறை ஏடான உண்மை எனும் ஏடு தனது அறியாமையை பறைசாற்றும் வகையில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.

'புஷ்பக விமானமும் புராக் விமானமும்' என்ற தலைப்பில் வெளியான அக்கட்டுரையில் உணர்வில் எழுதப்பட்ட மேற்கண்ட வரிகளை எடுத்துக் காட்டி சில வினாக்களை எழுப்பியுள்ளது.

முகம்மது நபி (ஸல்) அவர்கள் புராக் என்ற மிருக விமானத்தில் ஏறி மிஹ்ராஜ் என்கிற விண்வெளிப் பயணம் சென்றதாக இஸ்லாம் மார்க்கத்தில் நம்பப்படுகிறது (நூல் புகாரி : 3207).

இராமன் சென்ற புஷ்பக விமானமும் முகம்மது நபி சென்ற புராக் விமானமும் எந்த வகையில் வேறுபட்டிருக்கிறது?

புராக் விமானத்தில் முகம்மது நபி அவர்கள் பயணம் செய்த நிகழ்ச்சிக்கு அறிவியல் ரீதியான நிரூபணங்கள் உண்டு என்பதற்கு என்ன ஆதாரம்? ('உண்மை' ஏடு ஜுன் 1-15, 2008)

இந்தக் கேள்வியின் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழவில்லை; அவர் ஒரு கற்பனைப் பாத்திரம் என்று வாதிடும் அளவுக்கு போலி பகுத்தறிவாளர்களுக்கு பகுத்தறிவு முற்றிப் போய் உள்ளது.

இஸ்லாம் குறித்த இந்தக் கேள்விகளையும், இதைத் தொடர்ந்து உண்மை ஏடு எழுப்பும் அத்தனை வாதங்களையும் பகுத்தறிவோடு எதிர் கொள்ள உணர்வு இதழ் தயார் என்பதை அறிவித்துக் கொள்கிறோம்.

போலி பகுத்தறிவுவாதிகள் கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ள அறியாமையையும், போலி பகுத்தறிவுவாதிகளிடம் மண்டிக்கிடக்கும் மூட நம்பிக்கைகளையும் தோலுரித்துக் காட்டுவதற்கு முன் உண்மை ஏடு ஏற்கனவே நம்மிடம் சூடுபட்டு பல வருடங்கள் பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடந்த வரலாற்றை நினைவுபடுத்துகிறோம்.

'அல் ஜன்னத்' ஏட்டின் ஆசிரியராக பீ.ஜே. இருந்தபோது அதில் இடம் பெற்ற ஏ.கே. அப்துர் ரஹ்மான் அவர்களின் கட்டுரை குறித்தும், உண்மை ஏடு இதுபோல் விமர்சனக் கட்டுரை எழுதியது.

இன்றைய அறிவியலை திருக்குர் ஆன் அன்றைக்கே சொன்னது என்று எழுதப்பட்ட கட்டுரையை மறுக்கப் புகுந்த உண்மை ஏடு ''அல் ஜன்னத் ஏட்டில் எழுதப்பட்டதுபோல் எந்த அறிவியல் அறிஞரும் கூறவில்லை'' என்ற ரீதியில் தனது விமர்சனக் கட்டுரையை எழுதியிருந்தது. நிரூபிக்க இயலுமா என சவாலும் விட்டிருந்தது.

இதற்கு பதிலடியாக அல் ஜன்னத் ஏட்டில் ஏ.கே. அப்துர் ரஹ்மான் அவர்கள் அடுக்கடுக்கான சான்றுகளை எடுத்து வைத்து தொடர் கட்டுரை எழுதினார்.
நேர்மையான சிந்தனையும், பகுத்து உணரும் அறிவும் உண்மை ஏட்டை நடத்துவோருக்கு இருந்தால் இந்த வாதங்களை மறுத்து கட்டுரை எழுதியிருக்க வேண்டும் அல்லது நாங்கள் தவறாக எழுதிவிட்டோம் என்று வருத்தம் தெரி வித்திருக்க வேண்டும். ஆண்டுகள் 15 ஓடிய பிறகும் இன்றுவரை உண்மை ஏடு வாய்ப்பூட்டு போட்டுக் கொண்டது.

இந்தப் பழைய வரலாறு மக்களுக்குத் தெரிந்திருக்காது என்ற எண்ணத்தில் 'உணர்வு' ஏட்டில் எழுதப்பட்ட ஒரு பாராவைப் பிடித்துக் கொண்டு விமர்சனம் செய்திருக்கிறது உண்மை ஏடு.

இனியும் இதுபோன்ற விமர்சனம் தொடரும் என்ற எச்சரிக்கை வேறு விட்டுள்ளது. பகுத்தறிவு என்ற பெயரில் இவர்கள் செய்யும் கேலிக் கூத்துகளை நாம் விமர்சிக்கப் புகுந்தால் தலை தெறிக்க ஓட்டம் எடுக்கும் முடிவை பெரியார் தொண்டர்கள் எடுப்பார்கள் என்று நாம் மறு எச்சரிக்கை விடுக்கிறோம்.

''அறிவியலுக்கு ஜால்ரா அடித்து தங்களின் வேதங்களையும், கடவுள்களையும் காப்பாற்றிக் கொள்ளும் நிலையை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையேல் இதுபோன்ற பெரியாரின் பகுத்தறிவுச் சவுக்கடி இன்னும் தொடரும்'' என்று உண்மை ஏடு மிரட்டியுள்ளது.

மிஹ்ராஜ் பயணம் குறித்து மட்டு மல்ல... இன்னும் பல விஷயங்கள் குறித்தும் கேள்விகள் கேட்க முடியும்.

கடவுள் இருப்பதாக நம்புகிறீர்களே, அதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா?

மரணித்தபின் மனிதன் உயிர்ப்பிக்கப் படுவான் என்று நம்புகிறீர்களே, அதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா?

சொர்க்கம், நரகம் என்கிறீர்களே, அதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா?

வானவர்கள், ஷைத்தான்கள் இருப்ப தாக நம்புகிறீர்களே அதை அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா?
இதுபோன்ற நூற்றுக்கணக்கான கேள்விகளைக் கேட்கலாம்.

எதையெடுத்தாலும் அறிவியல் ரீதியாக நிரூபிக்க முடியுமா என்று கேட்பது மூடர்களின் கேள்வியே தவிர பகுத்தறிவாளர்களின் கேள்வி அல்ல...

அறிவியல் சோதனைக்கு உட்படுத்தத் தக்கவைகளைத்தான் அறிவியல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஒன்றை நம்புவதற்கு அறிவியல் மட்டுமே போதுமான சாதனம் அல்ல என்பதை இந்தப் பகுத்தறிவாளர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனை விரும்புகிறான். இவன் அவனை விரும்புகிறான் என்று அறிவியல் ரீதியில் நிரூபிக்க முடியுமா?

ஒருவன் முன்னால் சுவையான உணவு உள்ளது. அந்த உணவில் அவன் ஆசைப்படுகிறானா இல்லையா என்பதை அறிவியல் மூலம் நிரூபிக்க முடியுமா?

அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியாத பல விஷயங்கள் பகுத்தறிவுப்பூர்வமானதாக இருப்பதை மறுப்பவன் பகுத்தறிவுவாதியே அல்ல.

இந்தப் போலி பகுத்தறிவுவாதிகள் கேட்ட கேள்விக்கு அவர்களது முதுகெலும்பை முறிக்கும் பதிலைத் தரவுள்ளோம். அதற்கு முன்னால் சில அடிப்படையான விஷயங்களை அனைவருக்கும் (போலி பகுத்தறிவாளர்களுக்கு) நாம் விளக்க வேண்டியுள்ளது.

1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த முஹம்மது என்ற மனிதர், தமக்கு இறைவனிடமிருந்து செய்திகள் வருவதாக வாதிட்டார். அன்றைய மக்கள் அவரது நாற்பதாண்டு கால தூய்மையான வாழ்க்கையைக் கண்டு அவர் மேல் மதிப்பு வைத்திருந்ததால் அவரை இறைவனின் தூதர் என்று நம்பினார்கள்.

எந்தச் செய்திகள் இறைவனிடமிருந்து வருகிறது என்று முஹம்மது அவர்கள் கூறினார்களோ அதுதான் திருக்குர்ஆன். இந்தக் குர்ஆனைத்தான் முஹம்மது நபியவர்கள் வேதம் என்று கூறினார்கள் என்பதை நிரூபிக்க தாஷ் கண்ட், இஸ்தான்பூல் ஆகிய நகரங்களில் உள்ள அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பட்டு வரும் மூலப் பிரதிகள் சான்று கூறிக்கொண்டிருக்கின்றன.

முஹம்மது நபி அவர்கள் எதை இறைவனின் செய்திகள் என்று கூறினார்களோ அந்தச் செய்திகளைப் பார்க்கும்போது எந்தப் பகுத்தறிவாளனும் அதை முஹம்மது அவர்களின் வார்த்தை என்ற முடிவுக்கு வரமாட்டான். அகில உலகையும் படைத்து பராமரிக்கும் பேரறிவாளனாகிய இறைவனின் கூற்றாகத்தான் இருக்க முடியும் என்ற முடிவுக்குத்தான் வருவான்.

நபிகள் நாயகம் காலத்தில் பூமி உருண்டை வடிவமானது என்ற அறிவு மனிதனுக்கு இருக்கவில்லை. ஆனால் பூமி உருண்டை என்பதையும், கோள்களும், துணைக் கோள்களும் சுழல்கின்றன, சுற்றுகின்றன என்பதையும் திருக்குர்ஆன் கூறுகிறது. நாத்திகர்களின் பாஷையில் சொல்வதாக இருந்தால் இதனை முஹம்மது நபி கூறினார்.

இதை முஹம்மது நபியால் எப்படிக் கூற முடிந்தது என்பதற்கான அறிவியல் விளக்கத்தை பெரியாரின் அடிபொடிகள் கூறத்தயாரா?

அன்றைக்கு வாழ்ந்த எந்த மனிதனும் அன்றைக்கு இருந்த அறிவைக் கொண்டு இதைக் கூறமுடியாது என்று நாங்கள் பகுத்தறிவோடு முடிவு செய்கிறோம். மனிதனைவிட பேராற்றல் மிகுந்தவனிடமிருந்துதான் இச்செய்தி வந்திருக்க வேண்டும் என்று பகுத்தறிவைப் பயன்படுத்தி முஸ்லிம்களாகிய நாங்கள் முடிவு செய்கிறோம்.

சூரியன் பல்லாயிரக்கணக்கான மைல் வேகத்தில் அதன் கோள்களை இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கிறது என்ற அறிவியல் உண்மை முஹம்மது நபியின் காலத்து மக்களுக்குத் தெரியவில்லை. ஆனால் திருக்குர்ஆன் இதைத் தெளிவான வார்த்தைகளால் கூறுகிறது. பெரியாரடிகளின் பாஷையில் முஹம்மது இவ்வாறு கூறியுள்ளார்.

எந்த மனிதனும் இந்த அறிவைப் பெற்றிராத காலத்தில் இதை முஹம்மது நபி எவ்வாறு கூறினார் என்று பகுத்தறிவுப் பூர்வமான விளக்கம் கூற போலி பகுத்தறிவாளர்கள் தயாரா?

பூமியின் ஈர்ப்பு விசை குறித்த அறிவு முஹம்மது நபியின் காலத்து மக்களுக்கு இருக்கவில்லை. ஆனால் இதைப் பற்றி குர்ஆன் பேசுகிறது. போலி பகுத்தறிவுவாதிகள் பாஷையில் முஹம்மது கூறியிருக்கிறார்!எனவே இதை முக்காலமும் அறிந்த பேரறிவாளன் இறைவன்தான் கூறியிருக்க முடியும் என்று பகுத்தறிவைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் நம்புகிறோம்.

முஹம்மது அன்றைக்கே இதை எப்படிக் கூறினார் என்பதற்கான அறிவியல் விளக்கத்தை போலி பகுத்தறிவுவாதிகள் கூறத்தயாரா?

பெரு வெடிப்புக் கொள்கை பற்றியும் அண்ட சராசரங்கள் உருவான விதம் பற்றியும் முஹம்மது நபியின் காலத்து மக்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் இதை எப்படி முஹம்மது சுயமாகக் கூறியிருக்க முடியும்?

இரண்டு கடல்களுக்கிடையே கண்களுக்குப் புலப்படாத திரை ஒன்று உள்ளது. அதன் காரணமாக இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை என்று இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த ஞானம் முஹம்மது நபி காலத்து மக்களுக்கு இருக்கவில்லை. ஆனால் இதை தெளிவான வார்த்தைகளால் திருக்குர்ஆன் கூறுவது எப்படி?

போலி பகுத்தறிவுவாதிகள் இதற்கு பகுத்தறிவுக்கேற்ற விளக்கம் தரத் தயாரா?

தேனீயின் வாய் வழியாக தேன் உற்பத்தியாகிறது என்று மக்கள் நம்பிக் கொண்டிருந்த காலத்தில், தேனீ உணவாக உட்கொண்ட குளுக்கோஸ் செரிமானம் ஆகி அதன் வயிற்றிலிருந்துதான் தேன் வெளிப்படுகிறது என்ற அறிவியல் உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதரால் எப்படிச் சொல்ல முடிந்தது?
இதற்கான பகுத்தறிவுப் பூர்வமான பதிலை போலி பகுத்தறிவுவாதிகள் தரத் தயாரா?

விண்வெளிப் பயணம் சாத்தியம் என்பதையும் அதற்கேற்ற சாதனத்தின் மூலம்தான் செல்ல இயலும் என்பதையும், அன்றைக்கே முஹம்மது நபி சொன்னது எப்படி?
ஐயா போலி பகுத்தறிவாளர்களே! இதற்கு விடை சொல்லத் தயாரா?

இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள பல விஷயங்களை அன்றைக்கே முஹம்மது நபி கூறியதை நாங்கள் அறிந்து இது முஹம்மது நபியின் கூற்று அல்ல என்று பகுத்தறிவுக்கேற்ப முடிவு செய்கிறோம்.
முஹம்மது நபி வாதிட்டதுபோல் அது இறைவனின் வார்த்தை என்று பகுத்தறிவு தீர்ப்பளிப்பதால் அதை ஏற்றுக் கொள்கிறோம்.

எப்போது நம்மை மிஞ்சிய பேராற்றல் மிக்க சக்தி - இறைவன் இருப்பதாக பகுத்தறிவைப் பயன்படுத்தி நம்பிவிடுகிறோமோ அந்த இறைவன் கூறும் மறுமை, சொர்க்கம், நரகம், மிஹ்ராஜ் உள்ளிட்ட அனைத்தையும் படைத்தவனே கூறுவதால் அவனுக்கு அது இயலும் என்பதால் நம்புகிறோம்.

சொர்க்கத்தை, நரகத்தை, மிஹ்ராஜை அறிவியல் பூர்வமாக நிரூபிப்பதாக இஸ்லாம் வாதாடவில்லை என்பதை பீடிகையாகக் கூறிக் கொள்கிறோம்.

போலி பகுத்தறிவுவாதிகள் தயார் என்றால் கீழ்க்கண்ட அறை கூவலை விடுக்கிறோம்.

குர்ஆன் கூறுகின்ற அறிவியல் உண்மைகளை அதற்கான அறிவியல் ஆதாரங்களோடு பொது மேடையில் நாங்கள் எடுத்துக் கூறுகிறோம். இதை எப்படி 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முஹம்மது கூறினார் என்பதற்கு அறிவியல் பூர்வமான விளக்கம் அளிக்க வீரமணி வகையறாக்கள் தயாரா?

அதுபோல் பகுத்தறிவாளர்கள் நியாயப்படுத்தும் பல மடமைகளைப் பற்றி நாங்கள் கேள்வி கேட்போம். அதற்கு அறிவியல் பூர்வமாக பொது மேடையில் விளக்கம் தர போலி பகுத்தறிவுவாதிகள் தயாரா?

பகுத்தறிவும், சிந்தனையும் 'உண்மை' ஏட்டுக்கு இருந்தால் இந்த பகிரங்க அறைகூவலை ஏற்க முன் வரவேண்டும்.

அடுத்தடுத்த தொடர்களில் எடுத்து ரைக்கப்படும் செய்திகளின் அடிப்படையில் அறைகூவல் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சொல்லிக் கொள்கிறோம்.

போலி பகுத்தறிவுவாதிகளுக்கு முதுகெலும்பை முறிக்கும் பதில்கள் இன்னும் வரும்... இன்ஷா அல்லாஹ்.

நன்றி: உணர்வு வார இதழ்.
பாகம் 2 மற்றும் 3 இங்கு காணலாம்.
நாங்கள் கேள்விதான் கேட்போம் பதில் சொல்ல மாட்டோம் என்கின்ற பகுத்தறிவு வாதிகளுக்கு இங்கு வேலை இல்லை, என்றுதான் சொல்லத் தோன்றுகின்றது.