Saturday, August 09, 2008

போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல்! - 3

இங்கு பாகம் 1 மற்றும் பாகம் 2

போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல்! - 3
உண்மை இதழில் வெளியான செய்திக்கு பதிலடி!!


பாகம் 3


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மிஹ்ராஜ் எனும் விண்வெளிப் பயணம் குறித்து தேவையில்லாமல் விமர்சித்து திராவிட கழகத்தின் உண்மை ஏடு முஸ்லிம்களை வம்புக்கிழுத்தது.

எதற்கெடுத்தாலும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்க இயலுமா என்று கேட்டு தங்களை மேதாவிகள்போல் காட்டிக் கொள்ளும் போலி பகுத்தறிவுவாதிகளின் மடமைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட அவர்களே நமக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தந்து விட்டார்கள்.

எனவே மிஹ்ராஜ் பற்றி விளக்குவதற்கு முன்னால் பகுத்தறிவின் ஒட்டு மொத்த குத்தகைதாரர்களின் மடமைகளையும் மூடநம்பிக்கைகளையும் அம்பலப்படுத்தி வருகிறோம்.

நாம் எழுப்பும் கேள்விகள் குறித்து பகிரங்க விவாதத்திற்கு தயாரா என்று வீரமணி வகையறாக்களைக் கேட்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக மேலும் சில கேள்விகளை முன் வைக்கிறோம்.


பெரியாருக்குச் சிலை

ஈ.வெ.ரா. பெரியார் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னால் மரணித்து விட்டார். அவர் அடக்கம் செய்யப்பட்டு மண்ணோடு மண்ணாகி விட்டார் என்பது வரலாற்று உண்மை. அறிவியல்பூர்வமாக நிரூபிக்க அறைகூவல் விட்டால் அதை நிரூபிக்க முடியும்.

ஆனால் பகுத்தறிவின் மொத்த குத்தகைதாரர்கள் பெரியாருக்கு நாடெங்கும் சிலைகளை நிறுவியுள்ளனர். இரும்பு, செம்பு, பாறை போன்றவற்றை பெரியாரைப்போல் செதுக்கி வைத்துள்ளனர். அந்தச் சிலைகளின் பீடத்தில் பெரியார் என்று எழுதியும் வைத்துள்ளனர்.

எதற்கெடுத்தாலும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பிவரும் பகுத்தறிவு கொழுந்துகளிடம் இதை அறிவியல்பூர்வமாக நிரூபிக்குமாறு அறைகூவல் விடுக்கிறோம்.

பெரியாரின் வெண்கலச் சிலையையும், பெரியார் எதிர்த்த இந்துக் கடவுள்களின் வெண்கலச் சிலையையும் உலகில் உள்ள எந்தச் சோதனைக் கூடத்திலாவது சோதித்துப் பார்த்து இது பெரியார் வெண்கலம், இது சாமி சிலையின் வெண்கலம் என்று வீரமணி வகையறாக்கள் நிரூபித்துக் காட்டுவார்களா?

பெரியாரின் கற்சிலையையும், அதே கல்லால் ஆன அம்மிக் குழவியையும் அறிவியல்பூர்வமாக சோதித்தால் இரண்டும் ஒன்று என்ற முடிவுதான் கிடைக்கும்.

இது பெரியார் எனக் கூறுவதற்கு எந்த அறிவியல் நிரூபணமும் இல்லை என்று தெரிந்து கொண்டே பெரியார் சிலை நிறுவு வது எந்த வகையான பகுத்தறிவு?

பொது இடங்களில் இத்தகைய சிலைகளை நிறுவுவதால் மக்களுக்கு இடையூறு தவிர எந்தப் பயனும் இல்லை என் பதையும், பொருள் விரயம் என்பதையும் அறியாத இவர்கள் எப்படி தம்மை பகுத்தறிவுவாதிகள் எனக் கூறிக்கொள்கிறார்கள்?


சிலைக்கு மாலை அணிவித்தல்


சிலை வடிப்பது எந்த அளவுக்கு மடமையோ அது போன்ற - அதையும் மிஞ்சுகின்ற மடமைதான் சிலைகளுக்கு மாலை அணிவிப்பது.

பெரியாரின் பெயரால் மூடத்தனமாக நிறுவப்பட்ட ஒரு சிலைக்கு இவர்கள் மாலை அணிவிக்கிறார்களே இந்த மாலை அணிவிப்பதை அந்தச் சிலை உணருமா? அல்லது அந்தச் சிலையின் மூலம் யாரை நினைக்கிறார்களோ அந்தப் பெரியார்தான் இதை உணருவாரா?

இதில் அடங்கியுள்ள அறிவியல் தத்துவம் என்ன இதில் உள்ள பகுத்தறிவு என்ன என்பதை பகிரங்க மேடையில் பட்டியல் போட்டு எமது கேள்விகளை எதிர் கொள்ள போலி பகுத்தறிவுவாதிகள் தயாரா?

இதுபோன்ற சிலைகளை வடித்துக் கொண்டு, இந்து மத பக்தர்கள் பூவையும், தேங்காயையும், சூடத்தையும் காட்டுவது மட்டும் மூடநம்பிக்கை என்றால் பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது மட்டும் பகுத்தறிவா?

குறிப்பிட்ட சிலைக்குள் அவர்கள் ஒரு வரைப் பார்ப்பதற்கும் அதுபோன்ற சிலை யில் பெரியாரைப் பார்ப்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன?

தெய்வங்களை நீங்கள் மாற்றிக் கொண்டீர்களே தவிர நம்பிக்கை ஒரே மாதிரியானதுதானே!

அவர்கள் படையல் செய்யும் பொருட்கள் வேறு! நீங்கள் படையல் செய்யும் பொருட்கள் வேறு என்ற வித்தியாசத்தைத் தவிர இரண்டு நம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம்?

கடவுள் சிலையைக் கடத்திச் சென்றால் அதிலிருந்து அந்தக் கடவுள் தன்னைத் தானே காத்துக் கொள்வாரா, பக்தர்கள் தானே காக்க வேண்டும், கடவுள் சிலை காணாமல் போய் விட்டால் அதைப் போலீஸ்தானே மீட்டுத் தரவேண்டும் என்றெல்லாம் பகுத்தறிவு வாதம் பேசினீர்களே! இதே கேள்வியை உங்களிடம் கேட்டால் அதற்கு அறிவியல்பூர்வமாக உங்களால் மறுமொழி கூற முடியுமா?

பெரியார் சிலையை யாரேனும் கடத்திச் சென்றாலும் அவரது பக்தர்கள்தானே அதைத் தடுக்க வேண்டும். பெரியாரின் சிலையே தன்னைத்தானே காத்துக் கொள்ளுமா? பெரியார் சிலை காணாமல் போனால் போலீஸ்தானே அதை மீட்க வேண்டும்?

காக்கைகள் எச்சம் போடுவதைக்கூட அந்தச் சிலையால் தடுக்க முடியாது எனும்போது அதை பெரியார் என்று உரு வகப்படுத்துவது எந்த வகையில் பகுத்தறிவு என்பதை வீரமணி வகையறாக்கள் விளக்க வேண்டும்.

இந்தக் கேள்வியை திராவிடக் கொழுந்து ஒருவரிடம் நாம் நேரில் கேட்டபோது, அவர் அளித்த பதிலைத்தான் இவர்களும் தர முடியும்.

கல்லைக் கடவுள் என்று எண்ணுவோர் அந்தக் கல்லிடம் வேண்டுதல் செய்கிறார்கள். பெரியாரின் சிலையிடம் நாங்கள் வேண்டுதல் எதுவும் செய்வதில்லையே என்பதுதான் அந்த திராவிடக் கொழுந்து அளித்த பதில். இதில் ஏதாவது பகுத்தறிவு இருக்கிறதா?

யானைக்கு சிலை வடிப்பவர்கள் அதில் யானையைக் காண்பார்கள்.
பூனைக்கு சிலை வடிப்பவர்கள் அதில் பூனையைக் காண்பார்கள்.
மனிதனின் சிலை வடிப்பவர்கள் அதில் மனிதனைக் காண்பார்கள்.
கடவுளின் சிலை வடிப்பவர்கள் அதில் கடவுளைக் காண்பார்கள்.

எல்லாமே இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்வதன் வெளிப்பாடுதான். இந்த அடிப்படையை விளங்காமல் நாங்கள் பெரியாரிடம் வேண்டுதல் செய்தோமா என்று கேட்பது என்னே மதியீனம்!

யானை சிலையைக் காண்பவன் அதற்கு மாலை அணிவிக்க மாட்டான். ஆனால் பெரியார் சிலையைக் காண்பவன் அதற்கு மாலை அணிவிக்கிறான். இதனால் பெரியார் சிலை வடிப்பவர் களைவிட யானை சிலை வடிப்பவர்கள் அறிவில் குறைந்தவர்கள் என்று நாம் வாதம் செய்தால் அதை வீரமணி வகையறாக்கள் ஒப்புக் கொள்வார்களா?


நினைவிடமும் அஞ்சலியும் !


பெரியார் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் எழுப்புவதும், அதில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதும் போலி பகுத்தறிவு வாதிகளின் வணக்க வழிபாடாக அமைந்துள்ளது.

ஒருவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் அவரது நினைவிடம் என்று முடிவு செய்வதில் உள்ள பகுத்தறிவு என்ன? எந்த இடமாக இருந்தாலும் அந்த இடத்தில் எத்தனையோ காரியங்கள் நிகழ்ந்திருக்கும். அந்த இடத்தில் நடந்த ஏராளமான காரியங்களில் இந்த மனிதர் அடக்கம் செய்யப்பட்டதும் ஒன்று.

அத்தனையையும் அலட்சியம் செய்துவிட்டு இன்னாரின் நினைவிடம் என்று அந்த இடத்தை முடிவு செய்வது எந்த வகையான பகுத்தறிவு?

அந்த மனிதர் அடக்கம் செய்யப்பட்டு ஆண்டுகள் பல கடந்துவிட்டால் அவர் மண்ணோடு மண்ணாக மக்கிப் போய் இருப்பார்.

காலாகாலத்துக்கும் அதை அவரது நினைவிடம் என்று கருதிக் கொண்டாடுவதற்கும், பகுத்தறிவுக்கும் என்ன சம்மந்தம்? அதையாவது மன்னித்து விடலாம். அந்த இடத்தில் இலட்சக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து அழகு படுத்துவதுதான் பகுத்தறிவா?

இதையும்கூட மன்னித்து விடலாம். அந்த இடத்தில் மலர் வளையத்தை வைத்து அஞ்சலி செலுத்துகிறீர்களே! நீங்கள் மலர் வளையம் வைப்பதை பெரியார் அறிவாரா? உணர்வாரா? உணர மாட்டார் என்றால் அங்கே மலர் வளையம் வைப்பதில் உள்ள அறிவியல் தத்துவம் என்ன என்பதை முஸ்லிம்களை வம்புக் கிழுக்கும் வீரமணிகள் விளக்குவார்களா? இவர்களின் பகுத்தறிவும் சுயமரியாதையும் இன்னும் அம்பலமாகும்.

இன்ஷா அல்லாஹ்...

நன்றி: உண்ர்வு இதழ்

தலைவரின் கொள்கைகளை விளங்கி நடப்பதை விட்டுவிட்டு, அவருக்கு சிலை வடித்து, மாலை மரியாதை செய்பவர்களின் பகுத்தறிவு இப்படித்தான் பல் இழிக்கும்.

7 comments:

said...

இன்றைய தினம் எனக்குச் சிலை திறப்பு என்னும் பெயராலே இந்தத் தர்மபுரியில் என்றும் காணாத அளவிற்குப் பெரும் விழாவாகக் கொண்டாடுகின்றனர். இங்குக் கூடி இருக்கின்ற இலட்சக்கணக்கான மக்கள் என்னைப் பெருமைப்படுத்த வேண்டும் என்று கூடியிருக்கின்றீர்கள். அதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் புகழ்ந்து மிகப் பெருமைப்படுத்தி பாராட்டிப் பலர் இங்கு பேசினார்கள். வைதால் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். மனதறிந்து நமக்குப் பொருத்தமில்லாத புகழ் வார்த்தைகளைக் கேட்கும் போது மனம் சங்கடப்படுகின்றது. என்றாலும், அவர்கள் மனம் நிறையும்படி என்னால் இயன்ற அளவுக்கு நடந்து கொள்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நம் இயக்கத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். நம் இயக்கம் நாச இயக்கம் -ஆக்க இயக்கமல்ல. அழிவு இயக்கமாகும். நாசமான காரியங்களை ஆக்கவேலையாகக் கொண்டிருக்கிற இயக்கமாகும். இந்த மாதிரி நாச வேலை செய்தவர்கள் எல்லாம் புராணங்களில், சரித்திரங்களில் பார்த்தால் அவர்கள் எல்லாம் அழிக்கப்பட்டு இருக்கின்றார்கள்.

நம் புலவர்கள் எல்லாம் நம்மை மூடநம்பிக்கைக்காரர்கள் ஆக்கிவிட்டார்கள் அவ்வளவு பெரும் எதிர்ப்புகளுக்கு இடையே நாம் தொண்டு செய்து நமக்கு முன்னோர்கள் அடைந்த கதியை அடையாமல் எந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்கின்றோம் என்றால் நாசவேலை செய்வபவர்கள் கையில் ஆட்சியை ஒப்படைத்து இருக்கின்றோம். நாச வேலை செய்பவர்கள் என்றால் பகுத்தறிவுவாதிகள் - அறிவைக் கொண்டு சிந்திப்பவர்கள் - அறிவின்படி நடப்பவர்கள் ஆவார்கள்.

மூடநம்பிக்கை மக்கள் நிறைந்த இந்த நாட்டில் பகுத்தறிவாளர்கள் ஆட்சி என்றால் பலாத்காரத்தால் ஆட்சிக்கு வரவில்லை, மக்களை ஏமாற்றி வரவில்லை. எங்கள் கொள்கை கடவுள் இல்லை, மதம் இல்லை, சாஸ்திரம் சம்பிரதாயம் இல்லை, சாதி இல்லை. இவையாவும் ஒழிக்கப்பட வேண்டும் என்று மக்களிடையே எடுத்துச் சொல்லி, அதன் மூலம் அவர்கள் ஓட்டுகளைப் பெற்று அமைந்த ஆட்சியாகும்.

நமக்கு முதலமைச்சராக இருந்த அண்ணா அவர்கள் இராமாயணத்தைக் கொளுத்தியவர். புராணம், இதிகாசம் ஆகியவற்றை எல்லாம் கண்டித்துப் புத்தகம் எழுதியவராவார். பத்திரிக்கைக்காரன் எல்லாம் நமக்கு எதிரிகள் என்பதால் நம் கொள்கைகள் - செயல்களை வெளியிடாமல் அதற்கு மாறானவற்றை விளம்பரம் செய்கிறார்கள் என்றாலும் அப்படிப்பட்ட அண்ணா மறைவு எய்தியதற்கு 30- லட்சம் மக்கள் வந்தார்கள் என்பதை அவர்களால் மறைக்க முடியவில்லை - வெளியிடாமல் இருக்க முடியவில்லை.
இந்த 30 - இலட்சம் மக்களும் அண்ணா யார்? என்று தெரியாமல் வந்தவர்கள் அல்லவே! அவர் நாத்திகர் என்பதைத் தெரிந்து வந்தவர்கள் தானே?

அண்ணா அவர்கள் சுயமரியாதைத் திருமணத்தைச் சட்ட பூர்வமாக்கினார்கள் என்றால் கல்யாணத்திற்குக் கடவுள், மதம், சாதி, பழைமை தேவையில்லை. ஓர் ஆணும், பெண்ணும் நாங்கள் சேர்ந்து வாழ்கின்றோம் என்று சொன்னால் போதும் என்று சொல்லிவிட்டாரே!

இது இந்த ஆட்சிக்குக் கடவுள் -மதம்- சஸ்திரங்களில் சாதி, பழமைகளில் நம்பிக்கைகக் கிடையாது என்பதைக் காட்டிக் கொள்வது தானே! இது அண்ணாவின் பெருமையா அல்லது வேறு யாரின் பெருமையா என்று கேட்கின்றேன்? அதோடு மட்டுமில்லையே, அரசாங்க அலுவலகங்களிலிருந்த "சாமி படங்களை எல்லாம்" நீக்க வேண்டும் என்று உத்தரவு போட்டாரே- இதை வேறு எந்த ஆட்சியிலும் செய்ய முடியாதே!

இந்த ஊரில் எனக்குச் சிலை வைத்தார்கள் என்றால் இந்தச் சிலை என்ன மணியடிக்கிற சிலை இல்லை, பூசை செய்கிற சிலை இல்லை, கடவுள் இல்லை என்று சொல்கின்றவன் சிலை. இந்தச் சிலை ராமசாமியின் சிலையில்லை - கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைத் தொழுகிறவன் காட்டுமிராண்டி என்று சொல்லுபவனுடைய சிலையாகும். கடவுள் உண்டு என்பவர்களுக்கு இல்லை என்பதைக் காட்டுவதற்காக இது அமைக்கப்பட்டதாகும்.

இந்த ஆட்சி இன்னும் 10 வருஷம் இருந்தால் கோயில்களை எல்லாம் அவர்களாகவே இடித்து விடுவார்கள்.

நாம் இந்த துறையில் மட்டுமல்ல, பல துறைகளில் மாற்றமடைந்து இருக்கின்றோம். ஆட்சி என்று உலகத்தில் எப்போது ஏற்பட்டதோ அன்று முதல், மூடநம்பிக்கைக்காரன் ஆட்சிதான் பார்ப்பான் ஆட்சிதான் நடைபெற்றிருக்கிறது. பார்ப்பானை மந்திரியாகக் கொண்டு பார்ப்பான் சொல்கிறபடி கேட்கிற ஆட்சிதான் நடைபெற்றிருக்கிறது.

பார்ப்பானுக்கு ஆட்சியில் - இயக்கத்தில் இடமில்லை என்ற நிலை இப்போது தானே, அதுவும் நம்முயற்சியால் ஏற்பட்டிருக்கிறது! இல்லை என்றால் இன்றும் பார்ப்பான் அல்லது பார்ப்பானின் அடிமைதான் ஆட்சியிலிருப்பார்கள்.

நம்முடைய தொண்டின் காரணமாக பிரசாரத்தின் காரணமாகத்தான் பார்ப்பான் அரசியலை விட்டு வெளியேறும்படி ஆயிற்று. நமக்கு மேலே உயர்ந்தவன் எவனுமில்லை. அவன் மட்டும் என்ன உயர்ந்தவன்? நீ மட்டும் ஏன் தாழ்ந்தவன்? எதற்காக ஒருவன் பார்ப்பானாக இருப்பது? இன்னொருவன் பஞ்சமன், பறையன், தீண்டப்படாதவனாக இருப்பது? என்கின்ற இது மாதிரிப் பிரச்சாரம் செய்தாலே தான் இன்றைக்குப் பஞ்சமனை, நாவிதனை, பள்ளன், பறையன் எல்லாம் மந்திரியாக்கி இருக்கின்றோம். பல பெரும் உத்தியோகங்களில் நம்மவர் இருக்கும்படியாற்றறு .இந்த நாட்டில் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று உண்மையில் பாடுபட்டவர்கள் - தொண்டாற்றியவர்கள் எங்களைத் தவிர வேறு யாருமில்லை.

காங்கிரசாரும், காந்தியும் இந்தத் தீண்டாமையைக் காப்பாற்றும் வகையில் தான் நடந்து கெர்டனரே தவிர, தீண்டாமை ஒழிய வேண்டும் என்று கருதியது கூடக் கிடையாது. நம் நாட்டில் தீண்டாமை இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

கடவுள், மதம், கோயில் இவற்றை எல்லாம் இன்னமும் கட்டிக் கொண்டு அழுவதால் தீண்டாமை எப்படி ஒழியும்? ஒருவன் தீண்டத்தகாதவனாக இருப்பது அவன் வழிபடுகிற கடவுளால், பின்பற்றுகிற மதத்தால், கோயிலுக்குப் போய் வெளியே நின்று கொண்டு கும்பிடுவதால் தானே? எனக்குக் கடவுளும் வேண்டாம், மதமும் வேண்டாம், என்னைத் தீண்டத்தகாதவனாக மதிக்கிற கோயிலுக்கு நான் போகமாட்டேன் என்கின்ற துணிவு வருகிறவரைத் தீண்டாமை நம்மை விட்டுப் போகாது.

இன்றைக்குக் காங்கிரஸ்காரன்தான் தீண்டாமையை ஒழித்ததாகப் பேசிக் கொண்டு திரிகிறான்.

நாங்கள் மலையாளத்தில் செய்த போராட்டத்தின் காரணமாக, திருவாங்கூர்காரன் கோயிலைத் திறந்து விட்டு நாயாடிகளை எல்லாம் நுழையவிட்டான்.

நாங்களும் மத மாற்ற மாநாடு கூட்டி, மக்களை எல்லாம் முஸ்லிம்களாக மாற்ற முற்பட்டபோது, பலர் இந்து மதத்தை விட்டு வேறு மதத்திற்கு அந்த மாநாட்டிலேயே மாறிவிட்டனர். மாறியவுடன் அதுவரை ஈழத்தவர்கள், கீழ்சாதிக்காரர்கள் நடக்கக்கூடாது என்றிருந்த இடங்களுக்குப் போக ஆரம்பித்ததும் மேல் சாதிக்காரர்கள் அவர்களை நுழையவிடாமல் தடுத்தனர். கலவரம் ஏற்பட்டது. அதில் முஸ்லிமாக மதம் மாறிய ஒருவன் இறந்து போய்விட்டான். உடனே கலவரம் முற்ற ஆரம்பித்தது. இந்து முஸ்லிம் கலவரமாக ஆக ஆரம்பித்தது விட்டது. எங்குப் பார்த்தாலும் கலகம் ஏற்படலாயிற்று.

இதைப் பார்த்து பயந்து, அப்போது இருந்த சி.பி.ராமசாமி அய்யர் எங்கள் ஆட்சியின் கீழுள்ள பொது இடங்கள், கோயில், குளம், பள்ளிக்கூடம் எல்லாவற்றிற்கும் எல்லா மக்களும் செல்ல உரிமை உண்டு என்று திறந்துவிட்டார். அதன் பிறகுதான் இங்கு இவர்கள் தீண்டப்படாதவர்கள் கோயிலுக்குள் செல்ல உரிமை வழங்கினர்.

அப்போது நான் காந்தியிடம் பறையர்களைக் கோயிலுக்குள் அனுமதித்ததன் மூலம் எங்களையும் பறையனாக்கினீர்களே தவிர, பார்ப்பான் போகிற இடம் வரை எங்களை அனுமதிக்கவில்லையே என்று கேட்டேன். உடனே காந்தி சூழ்ச்சியாக இந்துக்கள் போகிற இடம் வரை தான் பார்ப்பனர்களும் போக வேணடும் என்று சொன்னாரே ஒழிய, பார்ப்பான் போகிற இடத்திற்கு நாம் போகலாம் என்று சொல்லவில்லை என்பதோடு நடைமுறையில் பார்ப்பான் முன்பு போய்க் கொண்டிருந்த இடம் வரை போய்க் கொண்டுதான் இருக்கின்றான். அதை ஒன்றும் அவன் மாற்றிக் கொள்ளவில்லை.

நாட்டின் சகல துறைகளிலும் பார்ப்பானின் ஆதிக்கமே இருந்து வந்தது. ஆட்சித்துறை, அரசியல்துறை, மதத்துறை எல்லாவற்றிலும் அவனே ஆதிக்கத்திலிருந்து வந்தான்.

எனக்குத் தெரிய முதல் அய்க்கோர்ட்டில் தமிழர் ஜட்ஜாக வந்தது ராமசாமி ரெட்டியார். முதலமைச்சராக இருந்த போதுதான் ஆகும். அதற்கு பின் ஒன்றிரண்டாக இருந்து இன்று 10 - பேர்கள் தமிழர்கள் ஜட்ஜாக இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இந்த ஆட்சி தான் ஆகும். இன்று அய்க்கோர்ட்டில் இருக்கின்ற 14 - ஜட்ஜீகளில் 10 - பேர்கள் தமிழர்கள். மீதி 4 -பேர்கள் தான் பார்ப்பனர்கள் இன்னும் இரண்டு மாதம் போனால் தமிழர்கள் எண்ணிக்கை 12 - ஆகிவிடும். பார்ப்பானின் ஆதிக்கம் தொலைந்தது. இதனால் என்ன பயன் என்பீர்கள்? நம் வக்கீல்களுக்கும், நம் மக்கள்களுக்கும் அதனால் நல்ல வாய்ப்பபுக் கிடைக்கும். இன்னும் ஒரு மாதத்தில் அய்யா அவர்கள் டில்லி ஜட்ஜாக ஆவார் என்று நினைக்கின்றேன்.

நீதித்துறையில் மட்டும் அல்ல, கல்வி விஷயத்திலும் காமராசரைப் போல, அவரைவிட ஒருபடி அதிகமாகவே நடந்து கொள்கின்றனர். இதுவரை எஸ்.எஸ்.எல்.சி. வரை சம்பளம் இல்லாமல் இருந்தது. இப்போது கல்லூரி வகுப்பு (பி.யு.சி) வரை இலவசமாக்கி இருக்கிறார்கள். நம் மக்களுக்கு இருந்த மற்றும் எத்தனையோ கேடுகள் இந்த ஆட்சி வந்தபின் நீங்கி இருக்கின்றன. இந்தக் கட்சியைப் போல இனஉணர்ச்சியுள்ள அரசியல் கட்சி வேறு எதுவும் கிடையாது. இந்தக் கட்சியைத் தவிர மற்ற கட்சிக்காரன் அனைவரும் பார்ப்பான் கையைப் பார்ப்வனாகத்தான் இருப்பான். பார்ப்பான் சொல்கிறபடி நடப்பவனாகத்தான் இருப்பான்.

நம் பத்திரிக்கை என்பவை ஆரம்பிக்கும் போது நம் படங்களைப் போட்டு - கொள்கைகளைப் போட்டு மக்களிடையே பரவும். மக்களிடையே பரவிய பின் பார்ப்பானுக்கு வேண்டியவனாகி அவன் பிரசாரத்தை இவன் செய்ய ஆரம்பித்து விடுகின்றான்.

இன்று நம் பிள்ளைகள் அத்தனையும் படிக்கின்றன. இது மாடு மேய்க்கப் போகாது. உத்தியோகம் வேண்டும் என்றுதான் கேட்கும். நம்முடைய கடமை நம் இனத்தை ஆதரிப்பதே ஆகும். இன உணர்ச்சியோடு நம் இனத்திற்குத் தான் முதலிடம் கொடுக்க வேண்டும். மற்ற ஆட்சியிலில்லாத குறைகளோ அவற்றில் நடக்காத எந்தக் காரியங்களோ இந்த ஆட்சியில் நடைபெறவில்லையே.

நம் மக்களுக்கு இன உணர்ச்சி, அறிவுப் புத்தி இருக்க வேண்டும். இந்த ஆட்சி நம் ஆட்சி என்கின்ற எண்ணம் வேண்டும். இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். பார்ப்பானுக்கு இருக்கிற இன உணர்ச்சி நமக்கு வர வேண்டும். இந்த ஆட்சியில் நாம் பல முன்னேற்றங்களை அடைந்து இருக்கின்றோம். அந்த நன்றி நமக்கு இருக்க வேண்டும்.

நாமடைந்திருக்கின்ற நிலை நிரந்தரமான நிலையில்லை. முட்டுக்கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். கையை விட்டால் கீழே விழுந்து விடும் நிலையில் இருக்கிறது. அந்த நிலை மாறி, நிரந்தரமாக நிற்கிறவரை நாம் இந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.

இந்தச் சிலை வைப்பது, படம் திறப்பது, ஞாபச் சின்னம் வைப்பது போன்ற இவையெல்லாம் பிரச்சார காரியமே தவிர இது பெருமையல்ல. ஒருவன் இது யார் சிலை என்றால் இது பெரியார் சிலை என்று ஒருத்தன் பதில் சொல்வான். பெரியார் என்றால் யார் என்று கேட்பான்? உடனே அவன் பெரியாரைத் தெரியாதா? அவர்தான் கடவுள் இல்லை என்று சொன்னவராவார் என்று சொல்லுவான் இப்படி நம் கருத்தானது பரவிக் கொண்டிருக்கும். அதற்கு ஒரு வாய்ப்புத் தான் இந்தச் சிலையாகும்.

நான் இன்னும் வெகு நாளைக்கு இருக்க வேண்டுமென்று சொல்லுகிறார்கள். அவர்கள் மாப்பிள்ளை மாதிரி இருக்கிறார்கள். அதனால் தான் சொல்கிறார்கள். வெகு நாளைக்கு இருக்கிற எனக்கு அல்லவா அதன் தொல்லை தெரியும்?

நம் கருத்து மக்களிடையே பரவ வேண்டும், நம் கொள்கை பரவ வேண்டும் என்பது தான் இது போன்ற விழாக்களின் கருத்தாகும்.

-------24-05-1969 அன்று தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. விடுதலை 09-06-1969

----------------- நூல்: "பெரியார் களஞ்சியம்" - தொகுதி 18. ஜாதி - தீண்டாமை -பாகம் 12 -- பக்கம் 264-270

தோழரே நீங்கள் உங்கள் பதிவில் எழுப்பிய அத்துனை கேள்விகளுக்கும் பதில் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். அதுமட்டுமல்லாது பெரியார் இயக்கம் பற்றியும் தாங்கள் ஓரளவுக்கு அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.பெரியாரியக்கத்தவர்களுக்கு யாரிடமும் வம்பிழுக்கும் எண்ணம் என்றும் இருந்ததில்லை. கொள்கையில் கோளாறு ஏற்படும்போது எதற்காகவும் யாருக்காகவும் சமரசமின்றி போராடுவார்கள்.
மேலும் தெளிவடைய பெரியாரின் நூல்களைப் படியுங்கள். குறைந்தபட்சம் இஸ்லாம் பற்றி பெரியார் பேசிய எழுதிய பகுதிகளையாவது ஒரு முறை வாசிக்க வேண்டுகிறேன்.
நன்றி.

said...

//"போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல்! - 3"//

அவர்களால் உலக நாடுகளுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, 'அல்லாகூ அக்பர்' என்று சொல்லி ஆடுவெட்டுவது போல் கழுத்தை அறுத்துப் போடும் தீவிரவாதிகளை திருத்த முடியுமா என்று பாருங்கள்.

')) said...

பெயர் தெரிவிக்காத சகோதரர் அவர்களே உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

அய்யா, பெரியாரின் செயற்கரிய செயல்களை நாங்கள் குறை காணவில்லை. தாழ்த்தப்பட்டவர்களுக்காண அவருடைய போராட்டங்கள் உலகப் புகழ் வாய்ந்தவை. இருந்தாலும் அவரும் ஒரு மனிதர். மனிதர் என்ற அடிப்படையில் அவரின் குறைகளை நாங்கள் இங்கு பட்டியல் இட வரவில்லை. கடவுளுக்கு மட்டும் தான் சிலை வடிக்கலாம் என்றிருந்த காலத்தில் மனிதனுக்கும் சிலை வடித்து புரட்சி செய்தார். ஆனால், இப்பொழுதோ சிலைகளாக உள்ளவையாவும் கடவுளாக்கப்படும்பொழுது அதற்காண உங்களின் புரட்சி என்ன?
இஸ்லாத்தை நீங்கள் கேள்விக்கு உட்படுத்திய பிறகுதான், நாங்கள் உங்களின் செயல்களை உங்கள் வழியிலேயே கேள்வி கேட்கின்றோம்?
இதெல்லாம் எதற்கு? உங்களின் கேள்வி எந்த ஒரு அடிப்படையற்றது என்பதை உங்களுக்கு விளங்க வைக்கவே.
எங்களின் கேள்வியில் உள்ள எதார்த்த்தை புரிந்து கொண்டு அதற்காண உங்களின் பதிலை எதிர்பார்க்கின்றோம்? தயவுசெய்து இதையெல்லாம் நீங்கள் உங்களின் தலைவரிடம் கொண்டு செல்லுங்கள்.

நன்றி.

said...

தெய்வ சிலைகளில் எல்லாம் தெய்வம் இருப்பதில்லை, என்று நபிகள் நாயகம் நிரூபித்து காட்டியுள்ளார். கிறிஸ்தவ மதமும் இத்தனை கூறுகிறது. இருப்பினும் கத்தோலிக்க (கிறிஸ்தவ) மதம் பரவிய போது சிலை வணக்கத்தை கொண்டு வந்தது. அதற்கு காரணம், அறியாமையில் இருக்கும் மக்களுக்கு சிலையை காட்டி, கடவுளை காட்ட வேண்டிய நிலை இருந்தது தான். இது குறித்த தெளிவு உள்ளவர்களுக்கு, சிலையும் தேவையில்லை, கடவுளும் தேவையில்லை.
-Kalaiyagam
httP://kalaiy.blogspot.com

')) said...

சகோதரர்களே சிந்திப்பீர்…

விவாதத்திற்காண அழைப்பு கிடைக்கும் ஒருவர் தனக்கு விருப்பம் இருப்பின் அதில் கலந்து கொள்ளலாம். விருப்பம் இல்லாச பட்சத்தில் அதற்காண காரணத்தை கூறிவிட்டு விலகிக் கொள்வது அறிவுடமை. அதை விட்டுவிட்டு எங்களிடம் விவாதம் செய்வதற்கு முன்பு நீங்கள் அவரிடம் விவாதம் புரிந்து அவர்களை வென்றுவிட்டு பிறகு இவர்களிடம் விவாதம் புரிந்து இவர்களையும் வென்று விட்டு அதன் பிறகு கடைசியாக எங்களிடம் வாருங்கள் உங்களுக்கு பதில் அளிக்கின்றேரம் என்பது எந்தவித்த்தில் சரி என்பதை அவர்களின் பகுத்தறிவிற்கே விட்டுவிடுகின்றேன்.


இன்னொருவர் கூறுகின்றார் மதவாதிகள்தான் அடித்துக் கொள்கின்றனர். ஆனால், கடவுள் மறுப்பாளர் இவ்வாறு அடித்துக்கொள்வதில்லை என்று. பல்வேறு இடத்தில் இவர்களின் இக்கேள்விக்காண பதில் கூறப்பட்ட ஒன்றுதான். அதாவது இந்த கடவுள் மறுப்பாளரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதனால் இவர்களின் அடிதடிகள் மீடியாக்களால் பெரிது படுத்தப்படுவதில்லை. இவர்களுக்குள்ளேயே எவ்வளவு பிரிவுகள் என்பதை ஆராய்ந்தால் இந்தக் கேள்வியை கேட்டதற்கு வெட்கப்படவேண்டும். சிந்திப்பார்களா?

')) said...

//வீரமணிதாசன் said...
//"போலி பகுத்தறிவுவாதிகளோடு விவாதிக்க உணர்வு இதழ் அறைகூவல்! - 3"//

அவர்களால் உலக நாடுகளுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, 'அல்லாகூ அக்பர்' என்று சொல்லி ஆடுவெட்டுவது போல் கழுத்தை அறுத்துப் போடும் தீவிரவாதிகளை திருத்த முடியுமா என்று பாருங்கள்.//

வீரமணிதாசன் அவர்களே... உங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

உங்களின் ஆதங்கம் போன்றதே என்னுடைய ஆதங்கமும் ஆனால், அவர்கள் எல்லாம் மூளைச் சலவை செய்யப்பட்டவர்கள். நாம் எது கூறியும் அவர்கள் காதில் விழப்போவதில்லை. அவர்களைப் போன்றவர்களல்ல திராவிட கழகத்தினர். திராவிட கழகத்தினர் ஒன்றும் முகம் தெரியாதவர்கள் அல்ல. நாம் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்கள் தான் அது மட்டுமல்லாமல் நண்பர்களும் கூட.

மேலும் திராவிடக் கழகத்தினர்தான் இஸ்லாத்தைப்பற்றிய விவாதத்தை துவக்கினர். அதனால் தான் நாம் அவர்களை விவாதத்திற்கு அறைகூவல் விடுகின்றோம்.

எனக்கு ஒரு விசயம் சரியாக புரியவில்லை. விவாதத்தை துவங்கியவரிடம் விவாதத்திற்கு அழைத்தால் இங்கு வளைதளத்தில் நன்கு பரிட்சயமுள்ள திராவிட கழக மற்றும் அபிமானிகள் விவாதத்திற்காண பதில் கொடுக்காமல் நீங்கள் முதலில் மற்றைய மதத்தினரிடம் விவாதம் புரிந்துவிட்டு எங்களிடம் வாருங்கள் எனவும், வீரமணிதாசனான தாங்களும் தீவிரவாதியிடம் போய் பேசுங்கள் என விவாத்திற்கு பதில் கூறாமல், திசை திருப்புவதிலேயே முனைப்பாக இருப்பதற்கு காரணம் என்ன?

ஏன் இப்படி சிந்தித்தால் என்ன? நீங்கள் உங்களின் கருத்தில் உறுதியாக இருந்தால் இந்த விவாதத்தின் மூலம் வெற்றி பெற்று ஒரு பெரும் சமுதாயத்திற்கே நேர்வழி காட்டியதாக அமையாதா? இது ஒரு பெரும் வாய்ப்பாக ஏன் கருதக் கூடாது. எதற்கு இந்த விவாதத்திலிருந்து விலகி செல்வதிலேயும், இந்த விவாதத்தையே திசை திருப்புவதிலும் கண்ணும் கருத்துமாக உள்ளீர்கள்.

உங்களின் கண்ணியமான பதிலுக்கு ஒரு சமுதாயமே காத்து உள்ளது. பதில் தருவீர்களா? விவாதத்திற்கு சம்மதம் தருவதற்கு உங்களின் தலைவர்களை ஊக்கப்படுத்துவீர்களா?
பதில் தரவும் நன்றி.

')) said...

இதற்கான பதிலை www.thamizhoviya.blogspot.com வலைப்பதிவில் பார்க்க வேண்டுகிறேன்.
நன்றி அய்யா.